Description : மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று நின்று கவனித்து, நகர்ந்துகொண்டே இருக்கிறது. உணவுப்பண்பாட்டின் வழி சிங்கப்பூரின் வாழ்வியல் முறை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுத்தம் சுகாதாரத்துடன் உணவு தயாரித்து வழங்கும் தனித்தன்மை வாய்ந்த அங்காடிகளான ஹாக்கர் நிலையங்கள், உணவுக்கூடங்கள், இவற்றின் தரத்தை உணவுத்துறை நிர்ணயித்து உணவகங்களை செவ்வனே நிருவகிக்கும் முறை, சமூக மேம்பாடு, பல இன மக்கள் வாழ்வதால் உணவுச்சுற்றுலா மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குவது, சூழல் பாதுகாப்பு, நவீன உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள், இவையனைத்தையும் தன் பதினைந்து ஆண்டுகால உணவக மேலாண்மை அனுபவம், உணவுத்தயாரிப்பு நுணுக்கங்களை மேன்மைப்படுத்திக்கொள்ளவும் மேலும் கற்றுக்கொண்டு புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வம், தன்னுள்ளே ஊறும் கலை இரசனை இவற்றோடு பிணைத்து சுவாரசியத்துடன் கட்டமைக்கப்பட்டிருப்பதால் நிறைவான பயண அனுபவம் இந்த நூலை வாசிப்பவருக்குக் கிடைக்கிறது. அறிவியல் விளக்கங்களும் வரலாற்றுப் பின்னணியும் இயல்பாய் பயணத்தில் இணைந்துகொள்வது அருமை. தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த முதல் நூல் உணவை, பண்பாட்டைப் பற்றி மட்டுமன்றி, மனிதமனங்களின் விசித்திரங்கள் ஊடாக, கடந்து வந்த பாதைகளின் வடிவுருவங்களைத் தகர்த்துவிடாமல் அவற்றை மனதில் இருத்தி, வருங்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்தவாறு நிகழ்காலத்தின் ஒவ்வோர் அசைவையும் கூர்ந்து கவனித்து அதன்வழி தேடலின் பயணத்தைப் பதிவு செய்திருக்கிறது.
|