சு. தமிழ்ச்செல்வி (4.5.1971) திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர் குளம் எனும் சிற்றூரில் பிறந்த சு.தமிழ்ச்செல்வி தற்போது கணவர் கரிகாலன், குழந்தைகள் சிந்து, சுடர், கார்க்கி ஆகியோருடன் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார்நகரில் வசித்து வருகிறார். பெற்றோர் - சுப்பிரமணியன், முத்துலட்சுமி. முதுகலை தமிழ் பயின்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறு காட்டுத்துறை என ஐந்து புதினங்களும் சாமுண்டி எனும் சிறுகதைத் தொகுப்பொன்றும் இவரது இலக்கியப் பங்களிப்புகளாகும். தமிழ் வளர்ச்சித் துறை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, கலைஞர் பொற்கிழி விருது முதலான விருதுகளைப் பெற்றுள்ளார். மாணிக்கம், கீதாரி, அளம் போன்ற புதினங்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்புகளை மையப்படுத்தி தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அளம், கற்றாழை ஆகிய புதினங்கள் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப் பட்டுவருகிறது.