அ.ராமசாமி மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகே உள்ள தச்சபட்டியில் பிறந்தார் (1959). மதுரை, அமெரிக்கன் கல்லூரி (1987-1989), பாண்டிச்சேரி, பல்கலைக்கழக நாடகப் பள்ளி (1989-1997) ஆகியவற்றில் பணியாற்றிய அ. ராமசாமி திருநெல்வேலி, மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 1997 முதல் பணிபுரிந்து வருகிறார். நாடகங்கள், ஊடகங்கள், திரைப்படங்கள், வெகுமக்கள் பண்பாடு முதலியன அ. ராமசாமியின் முக்கிய அக்கறைகளாக இருந்து வந்திருக்கின்றன. இதுவரை, சங்கரதாஸ் சுவாமிகள் (2001), வட்டங்களும் சிலுவைகளும் (2000), ஒத்திகை (1999), நாடகங்கள் - விவாதங்கள் (1992) என நான்கு நாடகவியல் நூல்களும், வெகுமக்கள் பண்பாடு சார்ந்து அலையும் விழித்திரை (2000) என ஒரு நூலும் திரைப்படங்கள் குறித்து ஒளிநிழல் உலகம் (2004) என்றொரு நூலும் அச்சில் வந்துள்ளன. தி.சு. நடராசனுடன் இணைந்து தொகுத்த பின்னை நவீனத்துவம் : கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் (1998) என்றொரு கட்டுரைத் தொகுப்பும், ந. முருகேச பாண்டியன், பா. ஆனந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து தொகுத்த திறனாய்வுத் தேடல்கள் (2002) என்றொரு கட்டுரைத் தொகுப்பும் மற்ற இரண்டு நூல்கள்.