ஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: எஸ்.பாகுலேயன் பிள்ளை - வி. விசாலாட்சி அம்மா. வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந் தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலை பேசித் துறையில் உதவியாளராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத் தொடங்கினார். மனைவி: அருண்மொழி நங்கை, குழந்தைகள்: அஜிதன், சைதன்யா. 1997 முதல் நாகர்கோவில்வாசி. ஜெயமோகன் சிறுதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள் ஆகியவற்றை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நிழல் வெளிக் கதைகள் (2005), விசும்பு (2006) ஆகியவை இவரது பிற சிறுகதைத் தொகுப்புகள். நாவல்கள்: விஷ்ணுபுரம் (1997), பின் தொடரும் நிழலின் குரல் (1999), கன்யாகுமரி (2000), காடு (2003), ஏழாம் உலகம் (2004), கொற்றவை (2005). திறனாய்வு நூல்கள்: நாவல் (1991), நவீனத்துக்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து (2001), ஆழ்நதியைத் தேடி (2005), சு.ரா. நினைவின் நதியில் (2005), கண்ணீரைப் பின் தொடர்தல் (2006) ஆகியவற்றுடன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்துள்ளன. சூத்ரதாரி யுடன் இணைந்து இலக்கிய உரையாடல்கள் என்ற நேர்காணல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.